திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள 329 ஏக்கர் நிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அடிமனை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி, வெள்ளித் திருமுத்தம் கிராமத்துக்குட்பட்ட உத்தரவீதி, சித்திரை வீதி, அடையவளஞ்சான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 329 ஏக்கரில் பத்திரப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவசரத்திற்கு நிலத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த ஐகோர்ட் மதுரை கிளை, இந்த நிலம் கோவிலுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர் நல சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அம்மனு விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம், இந்த அடிமனை விவகாரத்துக்குட்பட்ட டிடி 1027-ல் கட்டப்பட்ட 329,91 ஏக்கர் இடத்திலும், பிளாக் வார்டு, டவுன் சர்வே எண்களில் உள்ள இடங்களில் தனிநபர்கள் பெயரில் மின் இணைப்பு ஏதும் வழங்கக்கூடாது என்றும், தனி நபர்கள் பெயரில் மின் இணைப்பு இருந்தால் அதனை கோவில் பெயருக்கு மாற்றம் செய்யவும் மின்வாரியத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் கோயில் நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையாக கோயில் நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களாக வீடு வீடாகச் சென்று வீட்டின் உரிமையாளர்கள் விவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது கோவில் நிர்வாகத்தின் உத்தரவின்படி கோவில் நிலத்தில் யார் யார் வசித்து வருகின்றனர் என்று பட்டியலிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை உரிமை மீட்புக்குழு சார்பில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்புக்குழு, ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு தலைவருமான மோகன்ராம் தெரிவிக்கையில்; - ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதி மக்களாகிய நாங்கள், மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் வாழும் அடிப்படை உரிமை, வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மதுரை ஐகோர்ட்டில் நாம் இதற்காக போட்டுள்ள Rev Petion 8130/2023-கேஸில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து வக்காலத்து பார்மில் கை யெழுத்து போட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தற்போது இதற்காக வீதியில் இறங்கிவிட்டது. இன்று கீழ சித்திரை வீதியில் ஸ்ரீரங்கம் கோவில் நில(கோவில்) அபகரிப்பு பிரமுகர் முன்னாள் வி.ஏ.ஓ பாலு தலைமையில் வீடு விடாக தற்போது வீட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை திரட்டி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோயில் அடிமனை உரிமை பிரச்சனைக்காக போராடும் ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த நாங்கள், இது சம்பந்தமாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக நில மீட்பு குழு தற்காலிக ஊழியர் Rtd VAO - பாலு&குழுவினர் வீடு வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கும் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரியும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையரிடம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகார் கொடுத்துள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.