நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர்.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு பல்வேறு சட்டப் போராட்டங்களை சந்தித்தது. இறுதியாக, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதலில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்த மத்திய அரசு பின்னர், பின்வாங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்களும், 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றவர். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார்.
நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால், தம்மைப்போன்ற கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாது என தொடர்ந்து போராடி வந்த அனிதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது உயிரிழப்பு அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்க கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள ஸ்டாலின், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மாநில அரசு பொறுபேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.