Advertisment

சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமித்து நீதிமன்றம் அதிரடி

சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிலைக் கடத்தல் வழக்கு

சிலைக் கடத்தல் வழக்கு

ரயில்வே துறை ஐஜி-யாக மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலை, சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

அருப்புகோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரது வீட்டில் நடைபெற்ற பணியின் போது 6 சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, தலைமை காவலர் சுப்புராஜ் ஆகியோர் அந்த சிலைகளை கணக்கில் காட்டாமல் ரூ.6 கோடிக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து இவர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், சிலைகளை விற்ற காவல் துறை அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோருக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த முறை வந்த போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷாவை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட நகல் நீதிமன்றத்தில் தாக்கல செய்யப்பட்டது. மேலும், அவரை கைது செய்யவும், விற்கப்பட்ட சிலைகளை மீட்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இந்த புலன் விசாரணைக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மகாதேவன், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, ரயில்வே துறை ஐஜி-யாக அண்மையில் மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் சிலை கடத்தல் தொடர்பாக வேறு நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றி தினம் தோறும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்குகளை திருச்சியில் அலுவலகம் அமைத்து பொன்.மாணிக்கவேல் அங்கிருந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிறப்பு அதிகாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தஞ்சாவூர் ஆட்சியர் ஒரு வார காலத்திற்குள் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதே போல சிலை கடத்தலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் , அவர்களுக்கு துணையாக செயல்பட்ட அலுவலர்கள் என அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், இந்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

Chennai High Court Pon Manikavel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment