கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கோவை சிறையில் இருந்து வளர்மதி இன்று விடுதலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் தாதனூரை சேர்ந்த வளர்மதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை மாணவியாக உள்ளார். கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார்.
இதையடுத்து, கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாகவும், ஓஎன்ஜிசி-க்கு எதிராகவும், ஜெயந்தி என்பவருடன் இணைந்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகித்துள்ளார். அப்போது, இருவரையும் கைது செய்த காவல்துறை, நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயந்தியை விடுவித்தனர். ஆனால், வளர்மதி மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்தது.
மாணவி வளர்மதி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து, அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த 5-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பொன்னுசாமி கலையரசன் உள்ளிட்ட இரு நீதிபதிகள், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவை சிறையிலிருந்து இன்று வளர்மதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை ஏராளமான மாணவர்களும், தன்னார்வல அமைப்பினரும் சிறை வாயிலில் பறை முழங்க வரவேற்றனர்.