
புதிய முறைப்படி பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டையில் ஆகஸ்ட் 18-ம் தேதி (நேற்று) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
பிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் வடிவமைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எந்தெந்த பகுதியில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த 3 மணி நேர தேர்வு என்பது இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் 600 மதிப்பெண் கணக்கிடப்பட உள்ளது. பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். ஜூன் மாதம் நடத்தப்படும் தேர்வில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். மன உளைச்சல் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் சிறப்பான கட்டமைப்பு வசதி, கழிப்பிட வசதியை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம், ஆந்திரா, மராட்டிய மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வருகின்ற பொது நுழைவுத்தேர்வை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள 52 ஆயிரம் வினாக்களை கொண்ட சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத்தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 450 மையங் களை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.