ம.நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.
சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல், கிட்னி மற்றும் நுரையீரல் பாதிப்புகள் இருந்தன. கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக மாற்று உறுப்புகள் வேண்டி முறைப்படி பதிவு செய்து காத்திருந்தார் அவர்.
பதிவு செய்து 67 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 3-ம் தேதி அவருக்கு கல்லீரல் மற்றும் கிட்னி உறுப்புகள் கிடைத்தன. திருச்சியில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உறுப்புகள் விமானம் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக நேற்று நடராஜனுக்கு பொருத்தினர்.
முன்னதாக நேற்று மாலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ம.நடராஜனை நலம் விசாரித்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இன்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் மருத்துவமனைக்கு வந்தார்.
அவரிடம் ம.நடராஜனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது திவாகரன் கூறியதாவது: நடராஜனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. ஏற்கனவே இரு முறை கிரிட்டிகல் நிலைக்கு சென்றுதான் அவர் மீண்டார். எனவே இது அவருக்கு மறுபிறப்பு. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நோய் தொற்று உருவாகிவிடக்கூடாது என்பதற்காக மருத்துவர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனாலும் அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.
நடராஜனுக்கு மாற்று உறுப்பு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த திவாகரன், ‘அது வெளிப்படையான நடைமுறை. அதில் யாரும் குறுக்கிட்டு தடை ஏற்படுத்த முடியாது. ஆனாலும் மாற்று உறுப்புக்காக பதிவு செய்து 67 நாட்கள் காத்திருந்தது நீண்ட காலம்தான்!’ என்றார்.
சசிகலாவுக்கான பரோல் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க இருப்பதாகவும் திவாகரன் தெரிவித்தார்.