Advertisment

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஏன் அவசர சட்டம் இயற்றுகிறது என்று கேட்கவில்லை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், கடைசி நேரத்தில் ஏன் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. மாநில அரசு கொண்டு வந்த அரசாணை உள்ளிட்ட நீட் குழப்பங்களால், தமிழகத்தில் இன்றளவும் மருத்துவக் கலாந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.

இதனைதொடர்ந்து, தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என திட்டவட்டம் தெரிவித்த நீதிமன்றங்கள், நீட் விவகாரத்தில் 85 சதவீத அரசாணையை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. அரசாணை ரத்து தொடரும் எனவும் உத்தரவிட்டன.

இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதனடிப்படையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட முன்வடிவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்நிலையில், நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கோரி, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த நீட் ஆதரவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே வாதாடிய நளினி சிதம்பரம், இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்ட முன்வடிவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், "தமிழக அரசின் செயல்பாட்டில் உடன்பாடில்லை. நீட் தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை. விதிகளை பின்பற்றாததால் கலந்தாய்வை நடத்த தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசத்தை வழங்கக் கூடாது" எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசின் அவசரச் சட்டம் குறித்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, இன்று பிற்பகலில் இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகவில்லை. மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி விளக்கமளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான வழக்கு விசாரணையின் போது, நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் சார்பில் வாதிடப்பட்டன. அவசர சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு என மத்திய அரசு வாதிட்டது. மேலும், நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதால் அவசர சட்டத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என தெரிவித்த மத்திய அரசு, இரண்டு, மூன்று நாட்களில் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டே அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அவசரச் சட்டத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில், சம நிலையை கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், நீட் விலக்கு அவசரச் சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பியது. நீட் தேர்வில் தேர்சியடைந்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு தேவை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், எந்த ஒரு மாணவரும் பாதிக்காத வகையில் அவசரச் சட்டம் இருக்க வேண்டும் என்றது.

தமிழக அரசு ஏன் அவசர சட்டம் இயற்றுகிறது என்று கேட்கவில்லை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு விவகாரத்தில் காலம் கடந்து கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டு ஏன் தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கேள்வி எழுப்பியது.

மேலும், இந்த அவசர சட்டத்தால் யாருக்கு நன்மை, பாதிப்பு என்ற புள்ளி விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனைத்து மானவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

அதேபோல், தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court Neet Supreme Court Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment