/indian-express-tamil/media/media_files/2025/10/11/supreme-court-pronounce-orders-tvk-petition-independent-investigation-karur-stampede-on-monday-october-13-tamil-news-2025-10-11-18-32-48.jpg)
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடை கோரிய த.வெ.க தரப்பு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி பரப்புரையில் மேற்கொண்டார். இந்த பரப்புரையின் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாமாக பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உத்தரவிட கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், 'இது போன்ற சம்பவத்தை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. கலவரம் நடப்பது போல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அனைத்தையும் போலீஸ் அனுமதித்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?' என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். விசாரணையின் நிறைவில், ‘கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் யஷ் எஸ்.விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதேபோல், கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பி.பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல் அமன் மாலிக் சி.பி.ஐ. விசாரணை கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
மேலும், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோப்புகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, உடனடியாக சி.பி.ஐ. விசாரணையை தொடங்கக்கோரி, கூட்ட நெரிசலில் பலியான பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசனும், சந்திராவின் கணவர் செல்வராஜ் சார்பில் வக்கீல் ஏ.லட்சுமி நாராயணனும் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க வக்கீல் ஜி.எஸ்.மணியும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது காரசாரமான விவாதங்கள் அரங்கேறியது. மேலும், பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றமும் எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், த.வெ.க தொடர்ந்த வழக்கில் வரும் 13 ஆம் தேதி (திங்கள் கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடை கோரிய த.வெ.க தரப்பு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. மற்ற மனுதாரர்கள் சி.பி.ஐ விசாரணையை கோரி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.