Advertisment

நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: 24-ம் தேதி கலந்தாய்வு

நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம் தெரிவித்தது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET, Students

நீட் அடிப்படையில் தமிழகத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாளை மறுநாள் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. மாநில அரசு கொண்டு வந்த அரசாணை உள்ளிட்ட நீட் குழப்பங்களால், தமிழகத்தில் இன்றளவும் மருத்துவக் கலாந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.

இதனைதொடர்ந்து, தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது என திட்டவட்டம் தெரிவித்த நீதிமன்றங்கள், நீட் விவகாரத்தில் 85 சதவீத அரசாணையை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. அரசாணை ரத்து தொடரும் எனவும் உத்தரவிட்டன. மேலும், கலந்தாய்வை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றங்கள் அறிவுரை வழங்கின.

இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதனடிப்படையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட முன்வடிவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

அதனையடுத்து, நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கோரி, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த நீட் ஆதரவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்ட முன்வடிவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் சார்பில் வாதிடப்பட்டன.

அவசர சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு என மத்திய அரசு வாதிட்டது. மேலும், நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதால் அவசர சட்டத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என தெரிவித்த மத்திய அரசு, இரண்டு, மூன்று நாட்களில் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டே அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அவசரச் சட்டத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில், சம நிலையை கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், நீட் விலக்கு அவசரச் சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பியது. நீட் தேர்வில் தேர்சியடைந்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு தேவை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், எந்த ஒரு மாணவரும் பாதிக்காத வகையில் அவசரச் சட்டம் இருக்க வேண்டும் என்றது.

தமிழக அரசு ஏன் அவசர சட்டம் இயற்றுகிறது என்று கேட்கவில்லை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு விவகாரத்தில் காலம் கடந்து கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டு ஏன் தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த அவசர சட்டத்தால் யாருக்கு நன்மை, பாதிப்பு என்ற புள்ளி விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனைத்து மானவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தது.

இதனிடையே, நீட் விவகாரத்தில் நீட் வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது தெரிவித்த கருத்தில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. "நீட்டில் இருந்து ஓர் ஆண்டுக்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் உகந்தது இல்லை. சட்டப்பூர்வமாக அது செல்லாது" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கருத்து தெரிவித்தார். இது தமிழகத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற அறிவிப்பின் படி, வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம் தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நீட் தேர்வு அடிப்படையில் நாளை பிற்பகல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், நாளை மறுநாள் அதாவது வருகிற 24-ம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Chennai High Court Neet Supreme Court Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment