டி.டி.வி.தினகரன் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வண்டி வண்டியாக ‘குக்கர்’ வினியோகம் செய்யப்படுவதாக அதிமுக தரப்பில் போட்டோக்களுடன் புகார் செய்துள்ளனர்.
டி.டி.வி.தினகரன் பெயர் மறுபடியும் ஆர்.கே.நகர் தொகுதியில் சர்ச்சையின் மையப் புள்ளியாக இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. இங்கு அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக டிசம்பர் 11-ம் தேதி(இன்று) மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளராக கடந்த முறை தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறை, தொப்பி கிடைக்கவில்லை. அவருக்கு ‘குக்கர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. கடந்த முறை தொப்பியை பிரபலம் செய்ய, ஆளும் கட்சி என்கிற கோதா பெரிதும் பயன்பட்டது. இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை. எனவே ‘குக்கர்’ சின்னத்தை வெகுவேகமாக மக்களிடம் கொண்டு சேர்க்க படு தீவிர முயற்சிகளை டிடிவி தினகரன் எடுத்து வருகிறார்.
டி.டி.வி.தினகரன் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி முழுக்க அதற்குள் வண்டி வண்டியாக ‘குக்கர்’களை கொண்டு வந்து குவிப்பதாகவும், தேர்தல் விதிமுறையை மீறி அவற்றை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதாகவும் அதிமுக தரப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பியுள்ளனர்.
குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் குக்கர்கள் வந்து இறங்குவதாகவும், டிடிவி தினகரன் அணி முக்கிய நிர்வாகிகள் சிலர் பொதுமக்களுக்கு குக்கர் வினியோகம் செய்வதாகவும் படங்களையும் ‘ரிலீஸ்’ செய்திருக்கிறார்கள்.இது டிடிவி தினகரன் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.