ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள எதிர்கட்சி தயாராகிவிட்டது. இதன் ஒரு பகுதியாகதான், ஆய்வுக் கூட்டத்தை கூட்டி செயல் ஆலோசனை செய்து வருகிறார். ஆய்வு கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்தின் அடிப்படையில் இரண்டு பதவிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய சொல்லி உத்தரவிட்டார். அது கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்று தந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தனர். அதன் அறிக்கை இப்போது வரையில் தூங்கிக் கொண்டு இருக்கிறது. அதனை மீண்டும் தூசி தட்டிய செயல், அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில், மாவட்ட மறுவரையறை செய்ய புதிய குழுவை அமைத்துள்ளார்.
அந்த குழு கொடுத்த அறிக்கையின் படி சில மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவியை இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது கட்சியில் 65 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இதில் சிலர் தீவிரமாக செயல்படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன. இதன் அடிப்படையில் வருவாய் மாவட்டங்களுக்கு 2 மாவட்ட செயலாளர்கள் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம், செயல்.
அதன் அடிப்படையில் 60 மாவட்ட செயலாளர் மட்டும் போதும் என முடிவெடுத்துள்ளார்களாம். நெல்லை, விழுப்புரம், சேலம், கோவை என சில மாவட்டங்களில் மா.செ.கள் பதவியை இழப்பார்கள் என்று தெரிகிறது.