Singara Chennai 2.0 project : சென்னையை சர்வதேச நகரங்களுக்கு ஒப்பாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழகத்தில் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் காகிதம் அற்ற இ-பட்ஜெட் அறிவிப்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார் நிதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன்.
பொது இடங்களில் சுவரொட்டிகளே இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும் என்று அறிவித்தார் அமைச்சர். சுத்தமான பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0. செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்.
கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ரான்ஸ் சாலை, தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலையில் ரூ. 335 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர இருக்கும் சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ரூ. 87 கோடியில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நிறுவப்பட்டு முக்கிய நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ. 2058 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் நீர் கலப்பதை தடுப்பதற்காக ரூ. 2371 கோடியில் திட்டம் தீவிரமாக செயபடுத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil