Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் புதிதாக 5,693 (நேற்றைய எண்ணிக்கை 5,495) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது .
கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தின் தினசரி கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கையில் அசாதாரண நிலைத்தன்மை காணப்படுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இன்று வரை (4 சந்தர்ப்பங்களைத் தவிர்த்து) தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,500 - 6,000 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 39 பேர்களும் அரசு மருத்துவமனைகலில் 35 பேர்கள் என 74 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,717-பேர் (நேற்றைய எண்ணிக்கை - 6,227) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,47,366 ஆக உயர்ந்துள்ளது.
புதிய பாதிப்புகளுக்கு மேல் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு நல்ல போக்காக கருதப்படுகிறது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 88.98 % குணமடைந்துள்ளனர்
மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 47,012 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவதால், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான சுமைகள் நீங்கும்.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 994 (நேற்றைய எண்ணிக்கை 978) பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 490 ( நேற்று - 428), சேலம் – 309 ( 289), திருவள்ளூர் – 300 ( 299), செங்கல்பட்டு – 299 (267), திருப்பூர் – 291 (256), கடலூர் – 251 (253),காஞ்சிபுரம் – 189( 133), விழுப்புரம் – 128 (175), திருநெல்வேலி – 126 (108), வேலூர் – 104 (124), என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 7 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் இன்று 994 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,699 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து, புனே, புது டெல்லி, மும்பை, பெங்களூரு, தானே, ஆகிய பெருநகரங்களிலும் தொற்று எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil