ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது முகநுால் பதிவு: இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். அதற்கு மிக அவசரமான தீர்வுகள் தேவை. இதற்கு தீர்வு காண தகவல் தொழில்நுட்பத் துறை 'ஹேக்கத்தான்' போட்டிக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க உதவும் கருவியை கண்டுபிடிப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் கருவியைகண்டுபிடிக்கலாம். செயல்படும் நிலையில் இருக்கும் கருவியுடன் வருவோருக்கு பரிசு வழங்கப்படும்.ஆழ்துளை கிணறு தோண்டப்படும் ஆரம்ப நிலையில் அதன் அட்சரேகை தீர்க்க ரேகையைச் சுட்டிக்காட்டி அதை ஒரு பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்வதில் இருந்து கண்டுபிடிப்பைத் துவக்கலாம். மேலும் இந்த கருவியை சந்தைப்படுத்த, அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.