உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்ததால் 2016 ஆண்டு நடைபெற இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் பல முறை நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தைக் கடிந்துள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடைபெறால் தள்ளிப்போய்க்கொண்டே வருகிறது.
ஒரு கட்டத்தில் உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
கடந்த ஓரிரு மாதங்களாகத்தான் தமிழக அமைச்சர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நாங்குநேரியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்னும் 15 நாளில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று கூறினார். 15 நாட்கள் கடந்தும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பற்றி முதலமைச்சர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவருமே பேசினார்கள். இதனால், ஒருவழியாக 2019 டிசம்பர் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்பது உறுதியானது.
இந்தவாரத் தொடக்கத்தில், தமிழக காவல்துறை டி.ஜி.பி, ஜே.கே.திரிபாதி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், நவம்பர் 10 தேதி முதல் காவல்துறையினருக்கு விடுப்பு அளிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார். பாபர் மசூதி - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வர உள்ளதாலும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில்கொண்டுதான் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுவருகிறது.
நேற்று( நவம்பர் 7) சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என்பதால் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் இறுதி பட்டியலை அறிவித்த கையோடு, அவர்களின் பயிற்சி முகாம்களை முடிக்க தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால், தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நவம்பர் நடுப்பகுதியிலோ அதற்குப் பிறகோ கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இப்போதே கணக்குகளையும் மாநகராட்சி மேயர் பதவிகளை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்று தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த திமுக தரப்பில் வெளிப்படையாக அத்தகைய எந்த காய் நகர்த்தல்களும் காணப்படவில்லை.
அதிமுகவோ 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிகாரத்தில் இருக்கும்போதே உள்ளாட்சிகளில் தங்கள் கட்சியினரை வெற்றிபெற வைத்து பலப்படுத்தி விட வேண்டும் என்று தேர்தலை நடத்த ஆவலுடன் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவுகு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் புதுத் தெம்புடன் உள்ளது. அது தனது கூட்டணி பலத்தை பெரிய அளவில் நம்பியுள்ளது. இதனாலேயே, அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி மாநகராட்சி மேயர் பதவிகளைக் குறிவைத்து அணுகுகின்றனர்.
பாஜக சென்னை மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து செயல்படுகிறது. அதே போல, பாமகவும் தேமுதிகவும் சென்னை மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து நகர்வதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.
சென்னை மட்டுமில்லாமல், வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.எஸ். முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 8000 ஆயிரம் வாக்குகளில் தோல்விடைந்தார் என்பதால் வேலூரில் எளிதில் வெற்றிப் பெற்றுவிடலாம் என்று காய்நகர்த்தி வருவதாகக் கூறுகின்றனர்.
அதே போல, பாமக தரப்பிலும் வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு குறிவைத்து செயல்படுவதாக அந்த கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். தேமுதிகவும் சென்னை, வேலூர் மாநகராட்சிகளின் மேயர் பதவியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகள் யார் என்ன காய்நகர்த்தினாலும் எந்த பதிலும் அளிக்காமல் அதிமுக தலைமை மௌனமாக இருந்துவருகிறது.
திமுக தரப்பில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பார்களோ அறிவிக்கமாட்டார்களோ என்ற ஐயத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளும் இதில் பெரிய ஆர்வம் இல்லாமல்தான் உள்ளனர்.
அதிமுக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 24 ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பி.எஸ்.சும், ஈ.பி.எஸ்.சும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.
ஆகவே, இத்தனை நாளாக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டுவந்த அதிமுக அரசு இப்போது எதிர்க்கட்சிகளைவிட உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது தெளிவாகத் தெரிகிறது.