Tamil Nadu news today updates : சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில், எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, முடிச்சூர், அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
இதேபோன்று சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், நங்கநல்லூர் மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்தும் சிவப்பு நிற எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்) விடப்பட்டு உள்ளது. இதேபோன்று ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.
சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் ஏற்கெனவே திருப்பதி திருமலை தேவஸ்தான பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கப்பட்டார். இந்நிலையில், ஆந்திர அரசு தமிழகம் சார்பில் சேகர் ரெட்டியை தேவஸ்தான உறுப்பினராக மீண்டும் நியமனம் செய்து அறிவித்துள்ளது.
முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் ஒரு மாதத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும் என்றும் அறிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என கூறிவிட்டு தற்போது ஆளுநரை மு.க.ஸ்டாலின் சந்திப்பது ஏன்? திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் - ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்!
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு: தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “ 2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்!” என்று பதிவிட்டுள்ளார். 2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! https://t.co/hcrHWZvPMu— M.K.Stalin (@mkstalin) September 19, 2019
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த பேருந்துகள் அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை 3 நாட்களும் ஒட்டு மொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விமானப்படை தளபதியாக இருக்கும் பி.எஸ். தனோவாவின் பணிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தளபதியாக ஆர்.கே.பதாரியாவை இந்திய விமானப்படை தளபதியாக அறிவிக்க இருப்பதாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அவர் தற்போது விமானப்படையின் துணை தளபதியாக உள்ளார்.
நேற்று மாலை ஆளுநர் அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகைக்கு சென்றார் முக ஸ்டாலின். அப்போது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்த முடிவை மாற்றிக் கொள்ளும்படி ஆளுநர் தரப்பு கேட்டுக் கொண்டது. அதன் பின்பே போராட்டம் கைவிடப்பட்டது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட அறிவிப்பில் இருந்து ஸ்டாலின் பின்வாங்கவில்லை. ஆளுநர் அழைத்து பேசியதே திமுகவின் வெற்றி தான் என திமுக இளைஞர் அணி தலைவர் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது. ஜாமீனில் வெளிவர இயலாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரை கைது செய்வதற்காக மேற்கு வங்கம் சென்ற அதிகாரிகளை மம்தா அரசு சிறை பிடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
கரூர் வட்டாட்சியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கரூரில் அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தை தனிநபருக்கு பட்டா போட்டு கொடுத்ததாக புகார்
நிலத்திற்கு ஏற்கனவே அரசு ரூ.5.14 கோடி இழப்பீடுக்கு தந்த நிலையில் பட்டா போட்டு கொடுத்ததால் நடவடிக்கை
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார். அப்போது, ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து, கொடுத்து தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது, சரத்குமாரின் மனைவி ராதிகாவும் உடனிருந்தனார்.
தமிழக போக்குவரத்துத் துறையை சேர்ந்த ஓய்வுபெற்ற 6,283 ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த திட்டத்தின் ஆரம்பகட்டமாக 9 பணியாளர்களுக்கு அவர் காசோலைகளை வழங்கினார்.
தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராத தொகை குறைத்து அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
அபராதத் தொகை குறைத்து வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார் விரைவில் அரசாணை வெளியிடப்படும்-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டிவருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தற்போது வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 -3 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் திமுகவின் பொதுக்குழுக்கூட்டம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என க. அன்பழகன் அறிவிப்பு. கட்சியின் ஆக்கப்பணிகள், சட்டத்திட்ட திருத்தங்கள், மற்றும் தணிக்கைக் குழு அறிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ரயில்வே பணியிடங்களில் அளவுக்கு அதிகமாக வடமாநிலத்தவர்களே பணி புரிகின்றனர். தமிழகத்தில் திறமையான பணியாளர்கள் நிறையபேர் இருக்கின்ற போதும், வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்துவது அபாயகரமானது என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வருத்தம் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் லேண்டர் விக்ரமின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவடைகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் லேண்டரை இஸ்ரோவால் தொடர்பு கொள்ள இயலவில்லை. தற்போது நிலவில் பகல் பொழுது நிலவி வருகிறது. நாளை முதல் இரவு ஆரம்பம். இரவுப் பொழுதுகளில் -200 டிகிரி வரை குளிர் நிலவக்கூடும். அதற்கு ஏற்றவகையில் விக்ரம் வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக் கடலிலும், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜாஸ் விமானம் மணிக்கு 2,205 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தகது.
All Set For The Day! pic.twitter.com/JUUdzafutq
— Rajnath Singh (@rajnathsingh) September 19, 2019
மத்திய அரசு சமீபத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தி உள்ளது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவிப்பின்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத் தில் 4½ லட்சம் லாரிகள் ஓடாது.
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையார், திருவான்மியூர், கிண்டி, மீனம்பாக்கம் போன்ற இடங்களில் காலையிலும் லேசான மழை தொடருகிறது. இரவு மட்டும் 58 மில்லி மீட்டர் வரை மழை பதிவானதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும். விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
சென்னை, திருவள்ளூரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் சீதாலெட்சுமி, மகேஸ்வரி அறிவித்துள்ளனர்.
அமித்ஷாவின் ஹிந்தி மொழி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தைப் போல் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில் தனது கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கூறவில்லை என்றும், தனது பேச்சை நன்றாக கவனித்தால் அது தெரியும் என்றும், 2-வது மொழி ஒன்றை படிக்க விரும்பினால் இந்தி கற்கலாம் என்றுதான் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு திடீரென்று புறப்பட்டு சென்றார். அவருடன் தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும் சென்றார். அங்கு மாலை 5.30 மணி அளவில் மு.க.ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ½ மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.
பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், "கவர்னர் என்னை சந்திக்க விரும்புவதாக எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று நானும், டி.ஆர்.பாலுவும் கவர்னர் மாளிகைக்கு சென்றோம். இந்த சந்திப்பின்போது, 20-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடத்தப்பட இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி கவர்னர் பேசினார். என்ன காரணத்திற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை நாங்கள் கவர்னரிடம் விளக்கி சொன்னோம்.
அதைத்தொடர்ந்து அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் அழுத்தம் திருத்தமாக எங்களிடம் கூறினார்.
இதனால், தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால், கருணாநிதி வழி நின்று என்றும் எதிர்ப்போம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights