/indian-express-tamil/media/media_files/2025/04/28/ZymAMCul9oA1S04MghhQ.jpg)
MK Stalin in TN Assembly
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா குறித்து ஆளுநர் அனுப்பிய செய்தியில் உள்ள கருத்துக்களை நிராகரிக்கும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:
அரசியல் சட்டத்திற்கு முரணானது:
சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவு தொடர்பான செய்தி ஒன்றை ஆளுநர் பேரவைக்கு அனுப்பியிருந்தார். அதில், சில பிரிவுகள் குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்ததுடன், மசோதாவை அறிமுகப்படுத்தும்போதே ஆளுநரின் கருத்துகளையும் பேரவையில் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது அரசியல் சட்டத்திற்கும், சட்டப்பேரவை விதிகளுக்கும் முற்றிலும் முரணானது.
பேரவை உறுப்பினர்களுக்கே அதிகாரம்:
"ஒரு சட்ட முன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவோ, விளக்கங்களை ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவோ அல்லது வாக்கெடுப்பைக் கோரவோ அதிகாரம் உள்ளது."
மசோதா, பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன் மீது கருத்துகள் தெரிவிக்கும் அதிகாரம் மாண்புமிகு ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, சட்ட மசோதா குறித்து ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை இந்த பேரவை ஏற்றுக் கொள்ள இயலாது."
வார்த்தை நிராகரிப்பு:
ஆளுநர் பயன்படுத்திய 'Appropriate Consideration' (தகுந்த பரிசீலனை) என்ற வார்த்தை குறித்தும் முதல்வர் ஆட்சேபம் தெரிவித்தார். "கன்சிடரேஷன் (Consideration) என்று மட்டுமே சொல்ல வேண்டிய ஆளுநர், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக 'அப்ராப்ரியேட் கன்சிடரேஷன்' என்று குறிப்பிட்டுள்ளார். 'தகுந்த முறையில் ஆய்வு செய்ய வேண்டும்' என்ற பொருள் தரும் இந்த வார்த்தை, பேரவை சட்ட முன்வடிவுகளைப் பொருத்தமற்ற முறையில் ஆய்வு செய்வதாகக் கருதும் தோணியில் உள்ளது. இது பேரவையின் மான்பைக் குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
சட்டம் இயற்றுவது இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆளுநரிடமிருந்து வரப்பெற்ற கருத்துக்கள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்க மாட்டார்கள் என்ற காரணத்தால், அந்த கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை."
தீர்மானம் நிறைவேற்றம்:
இறுதியாக, "2025 தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்மொழிவை, பேரவையில் ஆளுநர் ஆய்வு செய்யக் கோரி அவர் வைத்த கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது" என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.