Tamil News Today Updates : தமிழகத்தில் இ-பாஸ் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும், அனுமதி வழங்கப்படும். சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பனிக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் இந்த கூட்டத்தொடரை கூட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரேநாளில் 6019 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பாஜக கை காட்டும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியில் அமரும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர், எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 1, 6, 9 ஆகிய அரசுப்பள்ளி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இன்று தொடக்கம். மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், மற்றும் புத்தகப்பை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தெற்கு ரயில்வேயில் தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வட மாநில இளைஞர்கள் நியமிக்கப்படுவதாகக் கூறுவது தவறு. பொது அறிவிப்பின் மூலமாகவே மண்டல ரயில்வே மற்றும் உற்பத்தி யூனிட்டுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் “நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம்.
நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக...
உங்கள் நான்.— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2020
முதலமைச்சர் பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்ரு ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 120 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கில், சிபிஐ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையில், கொரோனாவால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகள் தடயவியல் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் என கவிஞர் வைரமுத்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் முதல் பாடலை பாடிய எஸ்.பி.பி எனது கடைசி பாடலையும் பாட வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் வீதிகளில் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இதற்காக பல்வேறு இடங்களில் குறைந்தது 2 அடி முதல் 20 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை உள்ளதால் பெரிய அளவிலான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு இந்து அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி இந்த முறையீட்டை முன் வைத்துள்ளார்.
சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்? என்று திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். பிற மாவட்ட கொரோனா பாதிப்புடன் சென்னையை போட்டி போட வைக்க டாஸ்மாக் திறக்கப்படுகிறதா எனவும் அவர் கேட்டுள்ளார்.
பிறமாவட்ட கொரோனா பரவல் எண்ணிக்கைகளோடு சென்னையை போட்டி போட வைக்கத்தான் தமிழக அரசு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா ?#TASMAC
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 17, 2020
கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோன் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. இங்கு பலவகையான மதுபாட்டில்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது. 5 மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் காலாவதியான பீர் பாட்டில்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதிய பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
மணல் கடத்தல் வழக்குகள் அதிகரிப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள்
சவுடு மண் எடுப்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறதா?- நீதிபதிகள் கேள்வி
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுன்ட்டர் பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும். மதுபான கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி முறையில் இபாஸ் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையின் எல்லைப் பகுதியான வண்டலூரில் வழக்கம் போல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை ஒத்தி வைப்பதற்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஆக.19-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020
சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
’தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யாப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6,85,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 8,81,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமையை, நவம்பர் வரை இலவசமாக தர பிரதமரின் ’கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கோதுமை வழங்கவும், கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவு.
கொரோனாவில் இருந்து மீண்ட சாத்தான்குளம் காவலர் முருகன் மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் முருகன், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது குணமடைந்ததால் மீண்டும் சிறையிலடைப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights