பெட்ரோல் - டீசல் விலை
சென்னையில் 324வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா தடுப்பு ஒத்திகை
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இன்று முதல் 2 நாட்கள் கொரோனா நோய் தடுப்பு ஒத்திகை. 8 மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பால் அரசு நடவடிக்கை.
ஐ.பி.எல் போட்டி
ஐ.பி.எல் கிரிக்கெட் டி20 தொடரில் இன்று பெங்களூரு- லக்னோ அணிகள் மோத உள்ளன. டூபிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:36 (IST) 10 Apr 2023ஏப்ரல் 12ம் தேதி தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரி ஏப்ரல் 12ம் தேதி தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் சைதாப்பேட்டை தேரடி திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம், சனாதன ஆதரவு பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவிக்காததை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- 22:33 (IST) 10 Apr 2023முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மரணம்; ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உள்துறைச் செயலாளர், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 20:58 (IST) 10 Apr 2023ஆன்லைன் ரம்மி தடை மசோதா; அரசிதழில் இன்றே வெளியிடப்படும் - ஸ்டாலின்
ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது அரசிதழில் இன்றே வெளியிடப்படும். இன்று காலை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ளதை எடுத்து காட்டி இருந்தோம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
- 20:02 (IST) 10 Apr 2023ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம்
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. அதேநேரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தேசிய கட்சி அங்கீகாரத்தை இழந்தன
- 19:32 (IST) 10 Apr 2023ஆசிரியர் தகுதித் தேர்வு: நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் - அண்ணாமலை
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும். போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
- 19:13 (IST) 10 Apr 2023மிட்செல் மார்ஷ்-க்கு திருமணம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ், தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை திருமணம் செய்துக் கொண்டார்
- 18:47 (IST) 10 Apr 2023இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம் - ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்: “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம்; சட்டத்திற்கு ஒப்புதல் கையெழுத்திடும் உரிமையை நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பல்ல; ஆளுநரின் அரசியல் சட்ட விசுவாசத்தை, அரசியல் விசுவாசம் விழுங்கிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
- 18:09 (IST) 10 Apr 2023ஆளுநர் முன்னரே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்; அவரால் தமிழக அரசுக்கு நட்டம் - திமுக எம்.பி. வில்சன்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தி.மு.க எம்.பி வில்சன் கருத்து தெரிவிக்கையில், “ஆளுநர் இதை முன்னரே செய்திருக்க வேண்டும்; அவரால் தமிழக அரசுக்கு நட்டம்” என்று தெரிவித்துள்ளார்.
- 18:05 (IST) 10 Apr 2023பல் பிடுங்கிய விவகாரம்: முதல் நாள் விசாரணையில் யாரும் ஆஜராகவில்லை
அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக முதல் நாள் விசாரணையில் யாரும் ஆஜராகவில்லை; முதல் நாள் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், விசாரணை நடத்தும் அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லை புறப்பட்டு சென்றார்.
- 17:38 (IST) 10 Apr 2023சிவகிரி அருகே காட்டு யானை மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை
தென்காசி: சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரிய ஆவடைப்பேரி அருகே அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17:36 (IST) 10 Apr 2023தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளுநர் அடிபணிந்தார் - கே.பாலகிருஷ்ணன்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளுநர் அடிபணிந்துள்ளார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
- 17:31 (IST) 10 Apr 2023ஆன்லைன் சூதாட்ட தடை: ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது பா.ம.க-வுக்கு கிடைத்த வெற்றி
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பா.ம.க வலியுறுத்தி வருகிறது; ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி. உடனடியாக இச்சட்டத்தை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- 17:25 (IST) 10 Apr 2023ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு
ஆளுநர் ஆர்.என்.ரவி சற்று முன் கொடுத்த ஒப்புதல் அளித்தார்.
- 17:24 (IST) 10 Apr 2023கலாஷேத்ராவில் மனித உரிமைஆணையம் செவ்வாய்க்கிழமை விசாரணை!
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையக் குழு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளது. ஏற்கெனவே, மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில், மனித உரிமை ஆணையமும் விசாரணையைத் தொடங்குகிறது. 6 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- 16:52 (IST) 10 Apr 2023கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி தரப்பு வாதம் செய்த நிலையில், வழக்கு விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- 16:51 (IST) 10 Apr 2023மின்வேலியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழப்பு
தென்காசி: சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெரிய ஆவடைப்பேரி அருகே அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை
- 16:24 (IST) 10 Apr 2023ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல். ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை. ₨5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
- 16:23 (IST) 10 Apr 2023அ.தி.மு.க வழக்கு வழக்கு விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏன் ரிட் மனுவை தாக்கல் செய்தீர்கள்? – என்ற நீதிபதியின் கேள்விக்கு, கட்சி விவகாரம் தொடர்புடைய விசாரணை இந்த நீதிமன்றத்தில் நடைபெறுவதால் இங்கு தாக்கல் செய்ததாக ஈபிஎஸ் கூறிய நிலையில், வழக்கு விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- 16:18 (IST) 10 Apr 2023ஈபிஎஸ் தரப்பு ரிட் மனு மீதான விசாரணையில் நீதிபதி விலகல்
ஈபிஎஸ் தரப்பு ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி பிரதீபா எம்.சிங் விலகல். மனுக்களை யார் விசாரிப்பார் என்பதை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தகவல்
- 15:55 (IST) 10 Apr 202310ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கில தேர்வில் குளறுபடி
10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கில தேர்வில் கேள்வி எண்கள் 4, 5, 6ல் குளறுபடி காரணமாக 3 மதிப்பெண்கள் வழங்க தேர்வு துறைக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- 15:20 (IST) 10 Apr 2023அமைச்சர் துரைமுருகன் vs ஆளுனர்
மக்கள் பணத்தில் நடந்த நிகழ்ச்சியில் காந்தியை புறக்கணிப்பது எந்தவிதத்தில் நியாயம் பாஜகவை பிடித்திருந்தால் ஆளுநர் அந்த கட்சியில் இணைந்து கொள்ளட்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
- 15:19 (IST) 10 Apr 2023சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்த மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கணவர், தனியார் மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்ததை அடுத்து இழப்பீடு கோரி மனைவி தொடர்ந்த வழக்கில் உத்தரவு
- 15:19 (IST) 10 Apr 2023நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு உத்தரவு
ஆருத்ரா வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கத்தை ஏற்க பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 15:17 (IST) 10 Apr 2023புதுச்சேரியில் திமுக புதிய முயற்சி
புதுச்சேரியில் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டில் ஈடுபடுத்துவதற்கான பிரசார இயக்கத்தை திமுக சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வரும் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் அறிவிப்பு!
- 14:12 (IST) 10 Apr 2023ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வளாகத்தில் பாதுகாப்பு மதிப்பீடு செய்ய, உதிரிபாகங்கள், உபகரணங்கள் போன்றவற்றை உச்சநீதிமன்றம் மறுப்பு.
வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆளை பராமரிப்பு தொடர்பாக அளித்த இடைக்கால மனுவிற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
- 13:39 (IST) 10 Apr 2023மாநில அரசை ஆட்டிப்படைக்க ஏஜென்டாக ஆளுநர்: அமைச்சர் துரைமுருகன்
தமிழக அரசை ஆட்டிப்படைக்க ஒரு ஏஜென்ட் தேவை என்பதால் ஆளுநர் பதவியை உருவாக்கியது மத்திய அரசு
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆளுநர் தேவையில்லை என்று கூறியது தி.மு.க.
- 13:35 (IST) 10 Apr 2023அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கு: நாளை மறுநாள் விசாரணை
ஏப்ரல் 16ல் அதிமுக செயற்குழு கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒ.பி.எஸ்., தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு
- 13:01 (IST) 10 Apr 2023கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல்: பா.ஜ.க. அமைச்சர் மீது வழக்குப் பதிவு!
கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பா.ஜ.க. அமைச்சர் முனிரத்னா மீது ராஜராஜேஸ்வரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்களுக்கு சேலைகள் விநியோகித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் வாக்குப் பதிவு மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
- 13:00 (IST) 10 Apr 2023எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்: இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
- 12:54 (IST) 10 Apr 2023சிந்தனைச்செல்வன் பேச்சு!
விசிக-வின் சிந்தனைச்செல்வன் சட்டப்பேரவையில் பேசுகையில், "பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தின் தூண்டுதலுக்கு அம்பேத்கர் இரையானார் என்று ஆளுநர் மாளிகையிலேயே ஆளுநர் பதிவு செய்து, அம்பேத்கரை இழிவு படுத்துகிறார். இந்த அவையின் இறையாண்மையை மறுப்பது என்பது ஜனநாயகத்தை மறுப்பதாகும்.
மதச்சார்பின்மை, சமூக நீதி என்ற கோட்பாட்டுக்கு எதிராகவும் வெளிப்படையாக ஆளுநர் பேசி வருவது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது. மாநிலங்களின் உரிமையை பாதுகாப்பதற்கான மாபெரும் யுத்தத்தை, இரண்டாவது விடுதலைப் போராட்டத்தை, தமிழ்நாடு நடத்த வேண்டி இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
- 12:49 (IST) 10 Apr 2023காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மனு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
2019ம் ஆண்டின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைக்கு எதிரான பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தவறான புரிதல் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 12:46 (IST) 10 Apr 2023ஜி.கே.மணி பேச்சு!
இன்று சட்டப்பேரவையில் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, "ஆளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல. அதே நேரத்தில் இது அலங்காரப் பதவியாக இருப்பது மட்டுமே என அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார்
தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், கூடங்குளம், அணு உலை, ஸ்டெர்லைட் பிரச்சனை என்று தேவையற்ற பிரச்னைகளை பற்றி பேசி தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
- 12:12 (IST) 10 Apr 2023'ஆளுநருக்கு எதிராக 2வது முறையாக தீர்மானத்தை முன்மொழிகிறேன்': சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு:-
“தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும்.
தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது.
பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன்; ஆனால், அவரது அரசியல் விஸ்வாசம், அரசியல் சட்ட விஸ்வாசத்தை விழுங்கிவிட்டது. அதனால்தான், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார்
நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில், ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரது ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்."
- 12:08 (IST) 10 Apr 2023ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆளுநர் ரவிக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 12:03 (IST) 10 Apr 2023ஷர்மிகா மீது மேலும் இரண்டு புதிய புகார்கள்!
சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புதிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷர்மிகாவின் வீடியோக்களை பார்த்து பாதிப்பு எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து இந்திய மருத்துவ ஆணையரகம் ஆய்வு செய்து வருகிறது.
- 10:50 (IST) 10 Apr 2023ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 44,800, ஒரு கிராம் ரூ. 5,600க்கு விற்பனை
- 10:49 (IST) 10 Apr 20236-9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு அறிவிப்பு
சென்னையில் 6-9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வரும் 18ம் தேதி முதல் நடைபெறும் - தேர்வுத்துறை அறிவிப்பு
- 10:19 (IST) 10 Apr 2023ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தயார் நிலை
மருந்து இருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.
33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார்நிலையில் உள்ளன
சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் தென்படுவர்களுக்கு பரிசோதனை
தினசரி 11 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- 10:17 (IST) 10 Apr 2023கொரோனா தடுப்பு மாதிரி பயிற்சி
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் மாதிரி பயிற்சி நடைபெற உள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி
சென்னை, சென்ட்ரலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
- 09:46 (IST) 10 Apr 2023கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும், கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 1,900 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை 32,814-ல் இருந்து 35,199ஆக உயர்வு
- 09:11 (IST) 10 Apr 2023ஸ்டெர்லைட் ஆலை - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- 09:10 (IST) 10 Apr 2023ஆளுநருக்கு அறிவுரை: சட்டசபையில் இன்று தீர்மானம்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உரிய அறிவுரைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற, தமிழக அரசு திட்டம்
- 09:09 (IST) 10 Apr 2023ஹரி பத்மன் மீதான வழக்கு இன்று விசாரணை
கலாஷேத்ரா முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்
உதவிப் பேராசிரியர் ஹர் பத்மன் மீதான வழக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- 08:08 (IST) 10 Apr 2023புதிதாக 369 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் 369 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு. இதையடுத்து மொத்த சிசிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,900-ஆக உயர்ந்துள்ளது.
- 08:05 (IST) 10 Apr 20234 மாவட்டங்களில் மிதமான மழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
- 08:05 (IST) 10 Apr 2023அந்தமானில் 6 முறை நிலநடுக்கம்
அந்தமான் - நிகோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம். நேற்று 4 முறையும், இன்று 2 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம்
- 08:04 (IST) 10 Apr 2023அ.தி.மு.க பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை
ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரி அதிமுக சார்பில் மனு
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.