பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
பகுதி நேர வேலை என கூறி: ஜிப்மர் டாக்டர் மாணவரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரியாரா கிராமத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ் (26). புதுவை பிரியதர்ஷினி நகரில் தங்கி, ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். கடந்த மார்ச்சில் வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து இவருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம். யூடிப் சேனல்களை லைக் செய்தால் ரூ.150 கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய டாக்டர் அந்த டியூப் சேனலை லைக் செய்து போட்டோ எடுத்து அனுப்பினார். அப்போது அவர் வங்கி கணக்கில் ரூ.150 செலுத்தப்பட்டது. இதன்பின் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் டாஸ்க் முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது. இதை நம்பி சோதனை முறையில் ரூ.1000 செலுத்தினார்.
டாஸ்க் முடிந்தவுடன் பிட்காயின் வேலட்டில் ரூ.1300 வந்தது. அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றினார். இதைத்தொடர்ந்து ரூ.3 ஆயிரம் செலுத்தினார். அதற்கான தொகையம் வேலட்டில் வந்தது. இதனால் அந்த தளத்தை முழுமையாக நம்பிய டாக்டர் ரூ.26.30 லட்சம் பணத்தை முதலீடு செய்து டாஸ்க் முடித்தார். அவர் வேலட்டில் ரூ.36.34 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்றார்.
ஆனால் மேலும் கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த டாக்டர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil