சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தனை நலம் விசாரிக்க வந்த தமிழிசை செளந்தரராஜன், மருத்துவர்களை பாராட்டினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்க வற்புறுத்தி அண்மையில் நடைபயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் முடிவில் அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார். இந்த நிலையில் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான குமரி அனந்தன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
தமிழிசையின் ட்வீட்...
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் குமரி அனந்தனை சந்தித்து நலம் விசாரித்தனர்.
குமரி அனந்தனின் மகளும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை ஒரு மருத்துவர். அப்படியிருந்தும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற குமரி அனந்தன் ‘அட்மிட்’ ஆனது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது. தவிர, வெவ்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்தபிறகும், தமிழிசை செல்லாததும் சர்ச்சை ஆனது.
தமிழிசை இது தொடர்பாக அளித்த பேட்டியில், ‘வீட்டில் எனக்கு அவர் அன்பான அப்பா! ஆனால் வெளியிடங்களில் நான் சந்திப்பதை தேவையில்லாமல் சர்ச்சை ஆக்குவார்கள்.’ என குறிப்பிட்டார். சில தினங்களுக்கு முன்பு தனது கணவரும் மருத்துவருமான செளந்தரராஜனை மருத்துவமனைக்கு அனுப்பி நலம் விசாரித்தார் தமிழிசை.
குமரி அனந்தனின் சிகிச்சை நிறைவு பெறும் சூழலில் இன்று (17-ம் தேதி) தமிழிசை செளந்தரராஜன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வந்தார். அங்கு தனது தந்தையிடம் நலம் விசாரித்த அவர், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது தந்தை மற்றும் மருத்துவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார் தமிழிசை.
அந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தமிழிசை செளந்தரராஜன், ‘எனது தந்தையை நல்ல முறையில் கவனித்துக்கொண்ட ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருக்கிறார்.