/tamil-ie/media/media_files/uploads/2017/10/secretariate.jpg)
இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நேற்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 5 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மண்ணெண்ணெய் கொண்டு சென்ற போது இந்த விபத்து நேரிட்டது. இந்திய எல்லையில் உள்ள பகுதிகளுக்கு வழங்க மண்ணெண்ணெய் ஏற்றி செல்லப்பட்டு உள்ளது.
அந்த ஹெலிகாப்டர் 17 ஆயிரம் அடி உயரத்தில் வெடித்து சிதறியிருக்கிறது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் கீழே குதித்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் உயிர்பிழைக்கவில்லை. இந்தியா - சீனா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் பகுதியில் விபத்து நடந்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் பாலாஜியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். ராணுவ வீரர் பாலாஜியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். நிதியுதவியை உடனடியாக வழங்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.