கடும் வறட்சியால் மிக மோசமாக பாதிப்படைந்த தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகள் போராட்டாக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், டெல்லியில் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.
இதனிடையே, தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (25-ஆம் தேதி) ஒருநாள் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று பரவலாக தமிழகத்தில் பந்த் தொடங்கியுள்ளது. காலை முதல் மாலை வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. பேருந்து போக்குவரத்தும் முடக்கப்படும் என கூறப்பட்டது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஆளும் அதிமுக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகள், 'இந்த பந்த் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படும் ஒன்று' என்று கடுமையாக விமர்சித்திருந்தன. மேலும், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவிக்காததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், மளிகைக் கடை சங்கங்கள், ஆட்டோ வர்த்தக சங்கங்கள், உள்ளூர் காய்கறி சந்தை அமைப்புகள் போன்றவை இந்த பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
காவல்துறை சார்பில் அளித்த தகவலின்படி, பந்தை முன்னிட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு முறையாக காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.