தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க சார்பில், 15-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் சார்பில், பால் தயிர், மோர் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தனியார் நிறுவனங்களும் மக்களிடம் இருந்து பால கொள்முதல் செய்து பால்பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது பால் விலையை ஏற்றி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஆவின்பால் விலை ரூ3 குறைத்து உத்தரவிட்டார். கொரோனா காலட்டத்தில் இந்த விலைக்குறைப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்திய நிலையில், அதிக கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு பாக்கெட் பால் விலையை ரூ12 உயர்த்தி 48-ல் இருந்து 60-ரூபாயாக உயர்த்துவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மற்றும் டீக்கடை வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்போது தமிழகம் முழுவதும் டீக்கடைகளில், டீ, காபி, விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சதாரண மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், பால் விலை உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 1500 ஒன்றியங்களில் வரும் 15-ந் தேதி இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“