தமிழகத்தில் சென்னைக்கு மற்ற ஊர்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக இயக்கவேண்டும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்துகிறது.

இதைப்பற்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அவர்கள் கூறியுள்ளதாவது:
“பார்வையில் கண்ட உத்தரவிற்கிணங்க, நமது கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த ஷெட்-க்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அணைத்து ஓட்டுனர், நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் தாம்பரம், கிரோம்பேட்டை, ஆசர்கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
மேலும் மாலை 05.00 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்”, என்று தெரிவித்துள்ளனர்.