ராமேஸ்வரத்தில் இருந்து ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றனர். அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கற்படை வீரர்கள், அவர்களை நோக்கி ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சான் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்திய கடலோர படையினர் நடத்திய இந்த தாக்குதலால் மீனவர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வந்ததாக நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய கடலோர காவல் படையினர், ஹிந்தியில் பேசச் சொல்லி எங்களை அடித்தனர். ஹிந்தி தெரியாது என்று கூறிய போதும் அடித்தனர். அதுமட்டுமில்லாமல், ஹிந்தி தெரியாமல் மீன் பிடிக்க வந்தால், சுட்டுக் கொல்வோம் எனவும் மிரட்டினர்" என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையால் சுடப்பட்ட விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய மீனவ நல சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தந்தது.
இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர், பிச்சை அளித்த புகாரின் பேரில் தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.