தென்காசி தொகுதியில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 300-க்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பழனி நாடார் – அதிமுக சார்பில் செல்வ மோகன் தாஸ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் வெறும் 370 வாக்குகள் தான் என்றும் கூறப்பட்டது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளா அதிமுகவின் செல்வ மோகன்தாஸ் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது என்று கூறி பழனிநாடார் வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி தபால் வாக்ககளை மீண்டுமு் எண்ணுவதற்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை (ஜூலை 13) தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் மையத்தில் வந்த நிலையில், பாதுகாப்புக்காக சுமார் 200 காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்ட இந்த தபால் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 2 வாக்குகள் குறைந்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“