தமிழகத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 288 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1.95 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 17, 056 ஆக உள்ளது.
ஊரடங்கினால் புதிய தொற்று பரவல் குறைந்துள்ளதா என்பதை இப்போது கூற முடியாது என சுகாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஹாட்ஸ்பாட் சென்னை தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் குறைவான கொரோனா பாதிப்புகளை பதிவு செய்தாலும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை 6,791 பேரும், புதன்கிழமை 7,574 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 6,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,613 லிருந்து 44, 313 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 3,197 ஆகவும், செங்கல்பட்டில் 2,225 பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 1,410 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 889 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னை பிராந்தியத்தில் 11,062 புதிய கொரோனா பாதிப்புகளும் 126 உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளது. சென்னையில் 74 பேர் உயிரிழந்த நிலையில்,செங்கல்பட்டில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 4 இலக்க எண்களில் கோவிட் பாதிப்பு பதிவாகி உள்ளது. அதேபோல் 15 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் 140 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, நீலகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி தவிர அனைத்து மாவட்டங்களும் இறப்பை பதிவு செய்துள்ளன. சேலத்தில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 17 பேரும், திருவள்ளூரில் 14 பேரும், கோயம்புத்தூரில் 13 பேரும், மதுரை ,கன்னியாகுமரி ,தென்காசியில் தலா 11 பேரும் வேலூரில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை கோயம்புத்தூரில் அதிகமாக உள்ளது. வெள்ளிக்கிழமை 18,290 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் செங்கல்பட்டிலும் 13,742 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் 5000 முதல் 8000 வரையிலானோர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் 92% ஆக்சிஜன் படுக்கைகள், 96% ஐசியூ படுக்கைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் 99% ஐசியூ படுக்கைகள் நிரம்புயுள்ளன.
தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரத்தில் ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கைகளே இல்லை என்கிற நிலை உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.