அரசியலுக்கு வருவதாக நடிகர் கமல்ஹாசன் ‘பாவ்லா’ காட்டுவதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். மேலும், அரசியலுக்கு வருவது சாதாரணமானது அல்ல எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “அரசியல் என்பது முள் படுக்கை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசியலில் என்னென்ன கஷ்டங்கள் உள்ளன என்பதை நடிகர் கமல்ஹாசன் அரசியலில் வந்து தெரிந்துக் கொள்ளட்டும். அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் கமல்ஹாசன் ‘பாவ்லா’ செய்யக்கூடாது. இந்தி எதிர்ப்பிற்காக தான் குரல் கொடுத்தபோதே அரசியலுக்காக வந்துவிட்டதாக கூறும் நடிகர் கமல்ஹாசனுக்கு, 1976-ஆம் ஆண்டு ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது தெரியுமா?”, என கூறினார்.
இதேபோல், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கமல்ஹாசன் இப்படியே பேசிக்கொண்டு போனால், விரைவில் மூன்றாம் பிறை படத்தில் இறுதிக் காட்சியில் வரும் கமல்ஹாசனைப் போல ஆகிவிடுவார் என கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்கள், கமல்ஹாசனுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது, அவர் அரசியலுக்கு வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று விமர்சனம் செய்தார். கமல்ஹாசனை தி.மு.க தூண்டி விடுகிறது என்றும் தி.மு.க நடத்திய ஊழல்களை அவர் ஏன் தட்டி கேட்கவில்லை எனவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர். தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருவதால், கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் அனைவரும் குற்றம்சாட்டி, விமர்சனம் செய்து வருகின்றனர்.