Advertisment

மருத்துவ படிப்பு சேர்க்கை: தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு அநீதி - உயர்நீதிமன்றம் வேதனை!

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான மாணவி கிருத்திகாவின் வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மருத்துவ படிப்பு சேர்க்கை: தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு அநீதி - உயர்நீதிமன்றம் வேதனை!

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

Advertisment

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதனடிப்படையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட முன்வடிவுக்கு, மத்திய சட்ட அமைச்சகம் உள்பட மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன.

இதையெதிர்த்து, நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக் கோரி, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த நீட் ஆதரவு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் அவசர சட்ட முன்வடிவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் சார்பில் வாதிடப்பட்டன.

அவசர சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு என மத்திய அரசு வாதிட்டது. மேலும், நீட் விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதால் அவசர சட்டத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என தெரிவித்த மத்திய அரசு, இரண்டு, மூன்று நாட்களில் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், நீட் விலக்கு அவசரச் சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பியது. நீட் தேர்வில் தேர்சியடைந்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு தேவை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், எந்த ஒரு மாணவரும் பாதிக்காத வகையில் அவசரச் சட்டம் இருக்க வேண்டும் என்றது.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் காலம் கடந்து கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டு ஏன் தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த அவசர சட்டத்தால் யாருக்கு நன்மை, பாதிப்பு என்ற புள்ளி விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனைத்து மானவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, நீட் விவகார கருத்தில் இருந்து மத்திய அரசு திடீரென பின்வாங்கியது. "நீட்டில் இருந்து ஓர் ஆண்டுக்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் உகந்தது இல்லை. சட்டப்பூர்வமாக அது செல்லாது" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று, தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(ஆகஸ்ட் 24) வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி சார்பில் நேற்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், "தற்போது மருத்துவ படிப்பில் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதா? அல்லது மாநில பாடத்திட்டத்தின் படி மருத்துவ சேர்க்கை நடத்தப்படுகிறதா? என்பதை நேற்று(ஆகஸ்ட் 22) வரை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நீட் தேர்வு மதிப்பெண் 150 மட்டுமே. ஆனால், பிளஸ் 2 தேர்வில் 1184 மதிப்பெண்களும், 199.25 கட் ஆஃப்பும் பெற்றுள்ள என்னை மருத்துவ படிப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், "இந்த மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாநில அரசு, தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு விரைந்து முடிவெடுக்க முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, "மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த எத்தனை பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது, எத்தனை பேர் தேர்வாகியுள்ளனர்? அதேபோல சி.பி.எஸ்.இ மாணவர்கள் எத்தனை பேர் தேர்வாகியுள்ளனர் ? என்பது தொடர்பான முழு விவரங்களை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனகரத்துக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment