தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை ஜூன் மாதம் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்,"வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய கணினி திறன்களை பெறும் வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
மேலும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில், முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது 'ஸ்மார்ட் கிளாஸ்' ஏற்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் செலவிடப்படும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HitechLabs) ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தினால் அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என்றும் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக, சாம்சங் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 20 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 8 நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.