scorecardresearch

‘2 லட்சம் பேர் திரள்வார்கள்’: ஸ்ரீரங்கத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சேகர்பாபு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 22-ம் தேதி நெடுந்தாண்டம் உற்சவத்துடன் துவங்கியது.

‘2 லட்சம் பேர் திரள்வார்கள்’: ஸ்ரீரங்கத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சேகர்பாபு

உலக நாடுகளில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வரும் நிலையில் பிரதமர், முதல்வர் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் ஒற்றை இலக்கில் கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்புக்காக பல லட்சம் பேர் கோயில்களில் திரளும் பட்சத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழா ஏற்பாடு குறித்தும் அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு அனைத்து கோயில்களிலும் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று ஸ்ரீரங்கத்திலும் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உறுதி அளித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 22-ம் தேதி நெடுந்தாண்டம் உற்சவத்துடன் துவங்கியது. 21 நாட்கள் நடைபெறும் பகல் பத்து, இராபத்து திருவிழாவில் பகல் பத்து நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு செய்ய இன்று கோயிலுக்கு வந்தார்.

பகல்பத்தின் இரண்டாம் நாள் விழாவில் ரங்கநாதர் புறப்பாடில் கலந்து கொண்டார். பின்னர், கருடாழ்வார் சன்னதி மூலவர் பெரிய பெருமாள் சன்னதி உற்சவர் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்;

திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதியை மேற்கொள்வது குறித்த முதல்வரின் உத்தரவிற்கு ஏற்ப திருவிழா காலம் குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்ததாகவும் வைகுண்ட ஏகாதசி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி என்று நடைபெற உள்ளது. அன்று செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை  மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ளார்.

பகல்பத்து இராபத்து உற்சவ நாட்களில் மொத்தம் 17 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக சொர்கவாசல் திறப்பு அன்று 2 லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், குடிநீர் மற்றும் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 40 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் உருவாக்கப்பட உள்ளது.

அறநிலைத்துறையை சேர்ந்த 3 இணை ஆணையர்கள் கூடுதலாக இந்த திருவிழாவில் பணியில் இருப்பார்கள் மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின்போது பொது தரிசனத்தில் வருபவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தான் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி ஒரு சல்லி பைசா கூட வசூல் செய்யப்பட மாட்டாது. அதில் எவ்வித விதி மீறல்களும் நடைபெறாது

அதேபோல் அன்றைய தினம் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்களும் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை செய்வதற்கு கோயில் இணைய ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது கொரோனா பரவல் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கோவில்களில் கட்டுப்பாடுகள் குறித்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முடிவு எடுக்கப்படும்.

வருமுன் காக்கும் அரசாக இருந்து நிச்சயமாக கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் , தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றவருக்கு எப்போதும் போல இடையூறு இல்லாமல் சிறப்பு தரிசனத்திற்கு வழிவகை செய்யப்படும். திருப்பதி போன்று இங்கும் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய ஆலோசித்து வருகின்றோம் என கூறியுள்ளார்.

அதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்களான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், இராமநாதபுரம் கோவில் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த முருகானந்தன் திருச்சி உத்தமர் திருக்கோவிலில் ஓதுவாராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஸ்ரீரங்கம் கோயில் அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருவிழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு உள்ளே வந்தவுடன்,  பக்தர்களை உள்ளே விடாமல் கோயில் நிர்வாகிகள் பக்தர்களை தடுத்ததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெருமாள் தரிசனம் தடைபட்டது.

அதிகாலை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் முட்டியது, கோவில் பணியாளர்களின் கடுமையினால் பலர் பெருமாளை தரிசிக்க முடியாமல்  ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu minister sekar babu inspection in trichy srirangam temple