/indian-express-tamil/media/media_files/2025/10/28/cyclone-montha-2025-10-28-07-38-13.jpg)
மோன்தா புயல் எச்சரிச்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அதிகபட்சமாக எண்ணுரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தடுத்த நாட்களில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற படிப்படியாக மாறிய நிலையில், தற்போது புயலாக வலு பெற்றுள்ளது. மோன்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நேற்று மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று மோன்தா புயல் தீவிர சூறாவளி புயலாக மாறி வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டது.
மோன்தா புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகபட்சமாக எண்ணுரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கத்திவாக்கத்தில், 9.54 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலியில் 7.32 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மோன்தா புயல் எச்சரிக்கை காரணமாக, ஆந்திராவின் 3 நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஆந்திரா கடலோர பகுதி வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமாக புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோன்தா புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணத்தில் இருந்து தெற்கு – தென்கிழக்கில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மோன்தா புயல் எச்சரிக்கை காரணமாக காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us