/indian-express-tamil/media/media_files/2025/09/08/rain-heavy-weather-report-2025-09-08-17-44-22.jpg)
Tamilnadu Northeast Monsoon Heavy Rain Alert
சென்னை: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், கேரளா, தெற்கு உள் கர்நாடகம், கடலோர ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இன்று (அக். 16, 2025) தொடங்கியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ மற்றும் 13 செ.மீ மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 10 செ.மீ ஆகும். இது இந்த காலத்திற்கான இயல்பை விட 37% அதிகமாகும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி எச்சரிக்கை
வரும் 18-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை:
இன்று (அக். 16): தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் .
நாளை (அக். 17): தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை:
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°C-ஐ ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°C-லிருந்து 26°C-ஐ ஒட்டியும் இருக்கக்கூடும். நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த ஐந்து தினங்களுக்குத் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று வானிலை ஆய்வு மையம் இயக்குனர் அமுதா தெரிவித்தார்.
கோவை மழை:
கோவையில் இன்று காலை முதல் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலுக்கு மேல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பனக்கார வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிது நேரம் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
இதனிடையே அக்டோபர் 24-ஆம் தேதி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.