/indian-express-tamil/media/media_files/2024/11/22/mumnzI6emEtmQ0CGAhJ6.jpg)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்து, அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதனால் வருகிற 23ம் தேதி வரை நல்ல மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், முதுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகரித்துள்ளது.
தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வங்கக்கடல் பகுதியில் 50-60 வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது ஞாயிற்றுக்கிழமை (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை, வரும் 20, 22, 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான இடங்களிலும், 21-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், வரும் 20-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரவு நேரத்தில் மேகங்கள் திரண்டு வலுவடைந்து சென்னை மாநகரத்திற்குள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது சென்னைக்கு மிகச் அதிகமாக மழையைக் கொடுக்கப் போகிறது. முன்னதாக, நண்பகல் முதல் மாலை வரை, வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கனமழையை சந்தித்தது.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை (திருநெல்வேலி), தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த சுற்றாக இராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி மழை நகர்ந்து கொண்டிருக்கிறது, இது அங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் செல்லும்.
டெல்டா மாவட்டங்கள் முதல் புதுச்சேரி வரையிலான மற்ற கடலோர மாவட்டங்களிலும், இரவு முதல் காலை வரை மழை தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us