Tamilnadu Government Womens Incentive Update : குடும்ப அட்டையில் குடும்ப தலைவி புகைப்படம் இருந்தால் மட்டுமே அரசின் நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுவதால், குடும்ப அட்டையில் குடும்ப தலைவி புகைப்படம் மாற்றுவதற்கு அரசு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பெண்கள் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இரண்டு திட்டங்களை அறிவித்தது. இதில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டையில் தலைவியின் புகைப்படம் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்று கூறப்படுவதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தங்களது குடும்ப அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படத்தை மாற்றும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செயல்முறைக்காக அரசு அலுவலகங்கள் இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே குடும்ப தலைவரின் புகைப்படம் உள்ள அட்டையை மாற்றி குடும்ப தலைவி புகைப்படம் உள்ள புதிய அட்டைகளை பெற மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொரோனா தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில்,
வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட கார்டு பயன்படுத்துவோர் கார்டுகளில் குடும்பத் தலைவர்களுக்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கோரிக்கை வைப்பவர்களுக்கு, அவர்களன் விண்ணப்பம் பரிசீலனை செய்து மாற்றித் தரப்படும். ஆனால் எந்த வகை கார்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டு விண்ணப்பங்கள் அதிகளவில் வருகிறது' என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.