Tamilnadu Ration Card Update : தமிழகத்தில் திமுக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டையில் தலைவியாக பெண்கள் படம் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என்று தகவல் பரவியது. இதனால் குடும்ப அட்டையில் ஆண்கள் படம் உள்ள நபர்கள், தங்களது குடும்ப அட்டையில் மாற்றம் செய்யக்கோரி ஆன்லைன் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்புகொண்டு வருகிறன்றனர்.
இந்த திட்டம் குறித்து அரசு தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், பொதுமக்களின் இந்த மாற்றம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பயன்படுத்தி இடைத்தரகர்கள் பலரும் குடும்ப அட்டையில் மாற்றம் செய்வதாக கூறி பலரிடம் பணம் பறிக்கும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது. ஆனால் தற்போது இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சேலம் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் ஆண் புகைப்படம் உள்ள நபர்கள், தங்களது குடும்ப அட்டையில் பெண்கள் புகைப்படம் மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் 4,78,489 முன்னுரிமை குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 4,22,607 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாகவும், மீதமுள்ள 54,126 குடும்ப அட்டைகளில் ஆண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர்.
மேலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 79,793 குடும்ப அட்டைகளில் 65,462 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாகவும், மீதமுள்ள 13, 973 அட்டைகளில் ஆண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் விதிகள் 2017இன் கீழ் ஆண் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகளை பெண் குடும்பத் தலைவர்களாக மாற்றம் செய்யப்பட வேண்டும்.
தற்போது சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் இதற்காக நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் ஆண் குடும்பத் தலைவராகக் கொண்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் 68,099 குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலும் அல்லது அவருக்கு அருகில் உள்ள அரசு இ சேவை மையத்திற்கு சென்று பெண் குடும்ப தலைவராக மாற்றம் செய்துகொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க சரியான ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள மின்னணு குடும்ப அட்டை அக்குடும்பத்தில் உள்ள 18 வயது நிறைவடைந்த பெண் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.