கமல்ஹாசன், நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு தன்னுடைய இயக்கத்தினரிடம் கூறினார். இதுகுறித்து ட்விட்டரில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.
ஆராய்ச்சியை அலோபதியர்தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்தக் கூற்றுக்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தேவராஜன் என்பவர் கமல்ஹாசனை கைதுசெய்யக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கமும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் செயலாளரான டாக்டர் ஆ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உங்கள் அரசியல் ஆசைக்கு, வளர்ச்சிக்காக தயவுசெய்து நிலவேம்பு கஷாயம் குடிப்பதை இழுக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு செயலும், கருத்தும் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவே உள்ளது. உங்களுக்குத் தெரியாத விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் நீங்கள், உங்கள் சந்தேகம் தீர ஏதேனும் ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம்.
நீங்கள் கெளரவ டாக்டர் பட்டம் மட்டுமே பெற்றிருக்கிறீர்கள், நிஜ டாக்டர் அல்ல. நிலவேம்பைப் பற்றித் தெரியாமல் கருத்தைப் பதிவிட்ட நீங்களும் போலி மருத்துவர்தான். தடைசெய்யப்பட்ட எத்தனையோ மருந்துகள் இங்கு புழக்கத்தில் இருக்கும்போது அதைக் கண்டுகொள்ளாத நீங்கள், நிலவேம்பை மட்டும் எதிர்ப்பது ஏன்? இனிமேலும் இதுபோல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதை விட்டுவிட்டு, உங்கள் நடிப்புத் தொழிலை மட்டும் பாருங்கள். தேவையில்லாமல் மருந்துகள் பற்றிப் பேசி போலி மருத்துவத் தொழில் செய்ய வேண்டாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.