தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.ரவி, மாநில துணை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை செயலாளர் மனோகரன் வரவேற்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மாநில தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் பேசுகையில்; நரிக்குறவர் முதல் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்களை உடனுக்குடன் செய்ய ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் மட்டும் உள்ளதை நரிக்குறவர் குருவிக்காரர் ஆகிய எஸ்டி பட்டியலில் சேர்த்து உள்ளதால் தற்கால மக்கள் தொகை நிலவரப்படி 5 சதவீதமாக உயர்த்தி தர தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.
ஆன்லைன் மூலமாக ஜாதி சான்றிதழ் வழங்கும் பொழுது தந்தைக்கு ஜாதி சான்றிதழ் இருந்தால் மட்டும்தான் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. படிப்பறிவு அற்ற காட்டுநாயக்கன் மக்கள் ஜாதி சான்று பெறாமல் இருந்து விட்டதால் அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆன்லைன் ஜாதி சான்று தருவதில்லை. எனவே அவர்களுடைய ரத்த பந்த உறவுகள் ஜாதி சான்று பெற்றிருந்தால் மகன்களுக்கும் ஜாதி சான்று வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் படிப்பறிவு இல்லாத வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் ஜாதி சான்று பெற இயலவில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்களை மானுடவியல் ஆய்வாளர் மூலமாக விசாரணை செய்து ஜாதி சான்று வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“