scorecardresearch

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் முருகேசன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஆலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 250-க்கும் மேற்பட்ட காளையர்களும் மாடுபிடி களத்தில் இறங்கி களமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போட்டியினை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் முருகேசன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது.

25 பேர் கொண்ட தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர். வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்து நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி காளைகள் சீறிபாய்ந்தன. இருப்பினும் சில காளைகளை காளையர்கள் திமில் பிடித்து தழுவினர்.

காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள், ரொக்க பணம் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu trichy manaparai jallikkattu pongal festival

Best of Express