தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே அதிமுகவில் தினம் தினம் பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஒபஎஸ் இபிஸ் பனிப்போர் மற்றும் அறிக்கை மோதலால் பெரும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தொடங்கி வைத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் பதற்றமடைந்த நிலையில், அவர் மீண்டும் கட்சிக்கு வரவேண்டும் என்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் சசிகலா கட்சி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் பேச தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் தொண்டர்களுடன் உரையாடும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒபிஎஸ் இபிஎஸ் தரப்பு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தனர். இதனை கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட நிலையில், சசிகலாவுடன் தொடர்பில் இருந்த 14 முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். மேலும் சசிகலாவுடன் யாரேனும் தொடர்பில் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், 3 செயற்பாட்டாளர்களுடன் பேசிய சசிகலா தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான ஆடியோ பதிவில், மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் போன்று கட்சி விவகாரங்களைக் கையாள ஒரு முதிர்ந்த அரசியல்தலைவரின் அவசியம் குறித்து பேசியுள்ளார். இதில் எடப்பாடியைச் சேர்ந்த சுரேஷ் என்பருடன் பேசும்போது, பழனிசாமி மற்றும் அவரது செயல்பாடு குறித்து புகார்கள் வந்தன. மேலும் ஒன்றரை கோடி அதிமுக கேடர் உங்கள் பின்னால் வரிசையில் நிற்கத் தயாராக உள்ளார்கள் என்றும், "எடப்பாடியில் நாங்கள் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சசிகலா, "திருமண அழைப்பிதழ்கள் உட்பட அங்குள்ள செயல்பாட்டாளர்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன, அவர்களுக்கு நான் பதில்களை அனுப்பி வருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்ஜிஆர் ஆட்சியின் போது ஜானகி பிரிவின் செயல்பாட்டாளர்களிடமோ அல்லது ஜெயலலிதா பிரிவினரிடமோ நாங்கள் பாகுபாடு காட்டவில்லை. அந்த நேரத்தில் நான் மிகவும் இளமையாக இருந்தேன்.
ஆனால் தலைவர் (எம்.ஜி.ராமச்சந்திரன்) மறைவுக்குப் பிறகு, எங்களை விமர்சித்தவர்கள் உட்பட அனைவரையும் வழி நடத்தும் முதிர்ச்சியை நான் அடைந்தேன். இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்களுக்கு இந்த வகையான முதிர்ச்சி வரும். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டேன், “எங்கள் கட்சியில், நாங்கள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை.
ஆனால் இப்போது, அவர்கள் (இபிஎஸ், ஓபிஎஸ்) இதுபோன்ற அறிக்கைகளுக்கு அஸ்திவாரம் இடுகின்றனர். எல்லா சமூகங்களிலிருந்தும் செயல்பாட்டாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். மேலே உள்ள எவரும் உயர்வான முறையில் நடந்து கொண்டால், அவர்கள் தலைவர்களாக தொடர முடியாது, கட்சி ஊழியர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.