மாணவி அனிதா மரணம் குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி, சிறந்த பள்ளியில் படித்து, தனிப் பயிற்சிகள் மேற்கொண்டு, நல்ல வாழ்க்கைத் தரத்தோடு இருக்கும் மாணவர்களுக்கும், இப்படி எந்த வசதி வாய்ப்பும் இல்லாத மாணவர்களுக்கும் ‘ஒரே நாடு; ஒரே தேர்வு’ என்ற பெயரில் ஒரு தேர்வை நுழைப்பது எவ்வளவு பெரிய வன்முறை! நந்தனாரை ‘நெருப்புக்குள் சென்று தூய்மை அடைந்த பிறகு கோயிலுக்குள் வா’ என்று சொன்ன அந்தக் காலத் தீண்டாமைக்கும், ‘நிறையப் பணம் செலவழித்துத் தனி கோச்சிங் எடுத்து ‘நீட்’ போன்ற பல்வேறு நுழைவுத்தேர்வில் வெற்றித் தகுதியை நிரூபித்த பிறகு கல்லூரியில் படிக்க வா!’ என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
இந்தியா என்பது ஒரே தேசம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடு என்று சுருக்கிவிட முடியாது. கல்வி என்பதை மாநிலங்களின் உரிமைக்கு உட்பட்ட அதிகாரமாக மாற வேண்டும். ஒரு மாநிலத்தின் தனித்துவமான கல்விப் பிரச்சினைகளை, அதைப் புரிந்துகொள்ள இயலாத பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமை என்பது மீண்டும் அரசியலமைப்புச் சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துச் சென்ற வேடர்கள், இன்னும் பல மாணவர்களின் எதிர்காலத்தில் தீயை வைக்கக் காத்திருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறோம்?" என்று குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கை குறித்து கேள்விக்கு இன்று பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், "நீட் தேர்வு என்றால் என்னவென்று தெரியாத 6ஆம் வகுப்பு மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்துக்குத் தூண்டிவிடுகின்றனர்.
நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? நீட் பற்றி ஆக்டருக்கு தெரியுமா, டாக்டருக்கு தெரியுமா? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். அவருக்கு நீட் பற்றி என்ன தெரியும்? நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.