மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி மாநில முதல்வர்கள் ஆகியோர் நாடு முழுவதும் சென்று மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்க உள்ளனர். அப்போது, பாஜக அரசின் மூன்று ஆண்டுகளின் செயல்பாடுகள் குறித்தும், மக்களிடம் விளக்கமளிக்க உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை குறித்த இணையதள சேவையை, தி.நகரிலுள்ள பாஜக அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், பி.ஜே.பி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மோடி முகம் பதித்த ஸ்டிக்கர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஹெச்.ராஜா கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களை, மாநில அரசு அதன் திட்டங்களாகப் பயன்படுத்தி வருகிறது. அதனால்தான், ஸ்டிக்கர் ஒட்டி சாதனைகளை விளக்கி வருகிறோம். வீடுகள், வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். விவசாயிகள், கால்நடைகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
மூன்றாண்டு சாதனைகளை இன்று முதல், அடுத்த மாதம் 15-ம் தேதி வரை மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் நாடு முழுவதும் சென்று விளக்குவர்" என்றார்.