TASMAC Shops 3 Days Leave: இந்த மாதம் மட்டும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் அடைக்கப்பட இருக்கிறது. இதனால் டாஸ்மாக் பிரியர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் இந்தத் தகவல் கூறப்பட்டு வருகிறது.
டாஸ்மாக், தமிழக அரசுக்கான வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. மது வீட்டுக்கு கேடு என ஒருபுறம் பிரசாரம் செய்தாலும், ‘நாங்க தள்ளாடினாத்தான், அரசு தள்ளாடாம ஸ்டெடியாப் போகும்’ என்கிற மீம்ஸ்களுக்கு ஏற்ப குடிமகன்கள் கெத்தாகவே டாஸ்மாக் சரக்கை அனுபவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் ஒரு நாள் இயங்காவிட்டாலும்கூட, கை கால் நடுக்கம் காண்கிற தலைமுறையை உற்பத்தி செய்தாகிவிட்டது. முழு மது விலக்கு என்பது அடுத்தடுத்த தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறும் ஒரு அம்சமாக மட்டுமே மாறியிருக்கிறது.
இந்தச் சூழலில் இந்த மாதம் மட்டும் டாஸ்மாக் கடை 3 நாட்கள் அடைக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இப்போதே உஷாராகி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் ரெகுலர் வாடிக்கையாளர்களிடம் இந்தத் தகவல் பகிரப்படுகிறது. சரக்கை தவிர்க்க இயலாத வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும் ஆயத்தமாகின்றனர். ‘மது உடல் நலத்திற்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டு நலத்திற்கும், ஏன் நாட்டு நலத்திற்கும் கேடானது’என எத்தனை பிரசாரம் செய்தாலும், பலன் என்ன? என்பதுதான் புரியவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"