திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் விரும்பினால் பெறுவீர் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல பிரிவு இயக்குநர் அரவிந்தன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினார். இந்தியாவை போதைப் பொருள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் எனப் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து இறங்கிய அரவிந்தனிடம் 7-வது வகுப்பு மாணவன் பிரணவ் ஆதித்யா கைகளை பின்னால் கட்டிக் கொண்டு அவர் அருகில் நின்று கேள்வி ஒன்றை எழுப்பினார். போதை இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என நீங்கள் பேசும் போது கூறினீர்கள் ஆனால் அரசே டாஸ்மாக் கடையை நடத்துகிறதே? அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? எனக் கேட்டார்.
மாணவனின் கேள்வியை கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் வியந்து நின்றனர். பின்னர் அரவிந்தன் அவருக்கு பதில் அளித்தார். அமெரிக்காவில் மதுபானங்கள் 2,3 ஆண்டுகள் தடை செய்ததாகவும், அந்த சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் அதற்கான தகவல்கள் இணையத்தில் உள்ளதாகவும் அவர் பதில் அளித்தார். தொடர்ந்து மாணவன் பிரணவ் ஆதித்யாவை அரவிந்தன் பாராட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“