தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் அவர்களை நேற்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரான மு.தமிமுன் அன்சாரி, நாகப்பட்டினத்தில் தனித்தமிழ் ஆராய்ச்சியகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று கூறினார்.
நாகப்பட்டினனத்தில் பிறந்த மறைமலையடிகளாரின் நினைவாக இதனைக் கட்ட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமாக இது செயல்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இதர வேண்டுகோள்கள்
தமிழில் அறிவியல் பதங்களை அறிமுகம் செய்த மணவை. முஸ்தபா அவர்களுக்கு அறிவியல் தமிழர் என்ற பட்டத்தினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதே போல் பாடகர் நாகூர் ஹனிபா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், மக்கள் கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பெயரால் விருதுகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதே போல் கவிஞர் நா. காமராசன் அவர்களின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் தமிமுன் அன்சாரி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேண்டுகோள்களை உடனடியாக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக மாஃபா. பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.