சட்டப்பேரவையில் நடைபெற்ற தமிழர்களின் உயர் பண்பாட்டை எதிரொலிக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த 4-ம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் அன்றைய நிகழ்வின் போது சபாநாயகர் தனபால் பங்கேற்கவில்லை. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை ஏற்று நடத்தினார்.
உடல்நலக் குறைவு காரணமாக சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேரவையின் இன்றைய நிகழ்வுகளில் சபாநாயகர் தனபால் பங்கேற்றார். இன்றைய தினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி சபாநாயகரின் உடல் நலம் குறித்து முதலில் விசாரித்த பின்னரே கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.
பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கேளிக்கை வரி குறித்து பேசினார். ஜிஎஸ்டி வரியுயுடன் சேர்த்து கேளிக்கை வரி வசூலிப்பது திரையரங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் துறையை நம்பி ஆயிரகணக்கானோர் உள்ளதால், மாநில அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது, சபாநாயகரின் உடல்நலம் குறித்து விசாரித்த ஸ்டாலின், அவர் உடல் நலம் தேறி வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் தனபால், நன்றி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய ஆளுங்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள், "எதிர்க்கட்சி தலைவர் உள்பட கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் சபாநாயகரின் உடல் நலம் குறித்து விசாரித்து, அவர் உடல் நலம் மீண்டும் வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தது தமிழர்களின் உயர் பண்பாட்டை நிரூபித்திருக்கிறது" என புகழாரம் சூடினர்.
கட்சிப் பாகுபாடின்றி சபாநாயகரின் உடல்நலம் குறித்து உறுப்பினர்கள் விசாரித்ததும், அவர்களை ஆளுங்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் பாராட்டிப் பேசியதும் காண்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.