கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒப்படைத்தார்.
மொத்தம் 146 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 621 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விழிப்புணர்வு மூலம் மாணவர்கள் கொடுத்த தகவல்கள் உள்ளிட்டவற்றில் கஞ்சா குற்றவாளிகள் பிடிக்கப்படுகின்றனர். 2022இல் மட்டும் 35 கொலை வழக்குகள் பதிவாகின. கடந்த ஆண்டு 51 கொலை வழக்குகள் இருந்தது.
இதில், ஆதாய கொலைகள் 5 மட்டுமே நடைபெற்று உள்ளது. அனைத்து கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர்.
மேலும் 2022இல் 218 போக்சோ வழக்குகள் மாவட்டத்தில் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாக ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 1500 காவல்துறையினர் புத்தாண்டு பாதுகாப்பில் உள்ளனர்.
குறிப்பாக ஈஷா மையம் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை கூற முடியாது. 46 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளன.
சிந்தடிக் போதை பொருட்கள் ஆன மெத்தபெட்டைமென், ஸ்டாம்ப் உள்ளிட்டவை ரகசிய தகவல்கள் மூலம் மட்டுமே பிடிக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/