Advertisment

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எந்த கட்சிக்கும் தாவினார்களா? திருநாவுக்கரசர் கேள்வி

18 -எம்.எல்.ஏ -க்களும் எந்த கட்சிக்கு தாவினார்கள் என திருநாவுக்கரசர் கேள்வி

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest Tamil News Live: thirunavukkarasar, congress, MK Stalin

ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவே தந்திரமான வழியில் 18 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, அதிமுக அம்மா என இரண்டாக இருந்து வந்தது. பின்னர் ஓ பன்னீர் செல்வம் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்றாக கைகோர்த்தனர்.

Advertisment

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த மாதம் 29-ம் தேதி சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து 28-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். அதிமுக-வில் நடப்பது உட்கட்சி விவகாரம் என்பதால் அதில் தலையிட முடியாது என ஆளுநர் கூறியதாக தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 10-ம் தேதி திமுக. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். அப்போது ஒருவார காலத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என மு.க ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேலும் இணைந்து கொண்டார். இதில், சட்டமன்றத்தில் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.கட்சி தாவல் தடை சட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 18 -எம்.எல்.ஏ வேறு கட்சிக்கு செல்லாத நிலையில், எப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஆட்சியை பாதுகாக்க தந்திரமான வழியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு செல்லும் பட்சத்தில் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கட்சித்தாவல் எனகூறி அவர்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எந்த கட்சிக்கு தாவினர் என கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

Dmk Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment