தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு, கடந்த மே மாதம் 28ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் கடந்த 9ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, இந்த ஆலோசனைக்கு பிறகு நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்நிலையில், கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பஷீர் மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அதில், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. வழக்கு விசாரணையின்போது துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன்படி, துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அந்த சம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை, இதுவரை எந்த காவல் துறை அதிகாரிகள் மீதும் எந்த வழக்கும் தொடரப்படவில்லை ஆகிய காரணங்களை கூறி வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.